காட்டிடை பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்தில்
குஞ்சென்றும் மூபென்றும் உண்டோ....?
பாரதியின் வீர வரிகள் உயிர்பெற்று வந்தது போல் இருக்கிறது. அன்னா ஹசரேவை பார்க்கும் போது. இந்த தழல் குஞ்சல்ல பழுத்த மூத்த அனல். 42 ஆண்டுகளாக சலிக்காமல் போராடும் இவரின் போராட்டம் இன்று வீதிக்கு வந்திருக்கிறது முதல் முறையாக. (வாழ்க ஊடகங்கள்). தென்னிந்திய ஊடகங்கள் முற்றிலுமாக குறிப்பாக தமிழகத்தில் இது குறித்து பெட்டிசெய்தி கூட காணோம். ஆனால் வடக்கில் கிழிகிறது கிழட்டு அரசியல் வாந்திகளின் முகத்திரை.

வந்து குவியும் இளைஞர் ஆதரவு அந்த முதியவரே எதிர்பாராதது. மத்திய கிழக்கு நாடுகளை மையம் கொண்ட ஊழலுக்கு அடக்குமுறை ஆட்சிகெதிரான புயல் முதல் முறையாக தெற்கத்திய நாடுகளில் மையம் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த இந்தியாவும் இப்போது அன்னா ஹசரவை மற்றொரு மகாத்மாவாக பார்க்கிறது. 16 வயது பெண் டெல்லி இந்திய கேட்டிலிருந்து பேசுகிறார் " காந்தியை நாங்கள் பார்த்ததில்லை. அன்னாவை நான் காந்தியாகவே உணர்கிறேன்."
என் அன்பு இளைஞர்களே இதை விட்டால் இன்னொமொரு சந்தர்ப்பம் கிடைப்பதரிது. கைகோர்ப்போம் வாருங்கள். ஊழலுக்கு எதிராய் கிளர்திருக்கும் இந்த புரசியை நாம் தவறவிட்டால் வருங்கால சந்ததிக்கும் நாம் மிகபெரும் பாவம் இளைத்தவர்கள் ஆவோம். வாயிற்று பசிக்கு 10 ரூபாய் திருடியவனை ஆசனவாயில் குச்சியை சொருகும் அதிகாரம் கோடிகணக்கில் கொள்ளையடிபவனுக்கு சலாம் போடுகிறது. ஊழல் செய்தது உறுதிபடுத்தவே 20 வருடங்களாகும், தண்டனையோ மிக சொற்பம் தான். கொள்ளையடித்தை மிக விமரிசையாய் அனுபவித்து சந்தோசமாய் செத்து போவான். நாமோ தினம் தினம் சாகிறோம்.
ஊழலுக்கு எதிரான லோக் பில் கமிசனை அமுல் செய்ய 42 ஆண்டுகள் கிட்டத்தட்ட 10 அரசாங்கங்களிடம் தணியாம மல்லு கட்டிவரும் இவரை நாம் ஆதரிக்கவேண்டியது காலத்தின் கடமை. தவிர்க்க படகூடாத நமது உரிமை. இத்தனை வருடங்கள் கழிந்தும் வழக்கம் போல் ஒரு குழுவை அமைத்து லோக் பில் கமிசனை ஆய்வுக்கு உட்படுத்த முயற்சிகள் எடுத்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிரான இந்த சட்ட முன்வடிவை ஆய்வுக்கு உட்படுத்துவபர்கள் யார் தெரியுமா..? ஊழலின் மொத்த வடிவமான சரத்பவார் & கோ. மொத்த உறுப்பினர்களும் ஊழல் பெருச்சாளிகள்.
இதை எதிர்த்து தான் சாகும்வரை உண்ணாவிரத்தை தொடர்ந்தார் அன்னா. மொத்த உறுபினர்களின் 50 % பேர் மக்கள் பிரதிநிதிகளாகும், கண்ணியமான அரசு நிர்வாகிகளும் இடம் பெற வேண்டும் என்கிறார். ஊழல் செய்தவனுக்கு என்ன தண்டனை என்பதை ஊழல் செய்தவனே நிர்ணயிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் மத்திய அரசிற்கு இருக்கும் வரை இந்தியாவில் ஊழலை ஒழித்து விடுவோம், கருப்பு பணத்தை மீட்டு விடுவோம் என்பதெல்லாம் வீண் பேச்சு தான். இந்த சந்தர்பத்தில் நாம் கர்கொர்க்க தவறினால் வரலாறு நம்மை மன்னிக்காது மட்டுமல்ல இனி எந்த தெய்வம் வந்தாலும் இவர்களிடம் இருந்து நம்மை காக்க முடியாது.
இந்திய இளைஞர்கள் சோம்பேறிகள், குறிப்பாக தமிழக இளைஞர்கள் தொடைநடுங்கிகள் அவர்களுக்கு சினிமாவையும், கிரிகெட்டையும் விட்டால் வேறு எதுவும் தெரியாது என்றொரு அவப்பெயர் நமக்குண்டு. அதை களைய இதுதான் சரியான சந்தர்ப்பம். நடிகர் ஆமிர்கான் கூட அன்னா ஹசரேவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். உலககோப்பையின் இக்கட்டான தருணத்தில் இந்தியா வெற்றி பெற நாம் பிரார்த்தித்தோம், நமது ஆதரவை அவர்களுக்கு தெரிவித்தோம், இது அதைவிட முக்கியமான பிரச்னை. நாம் அன்னாவுடன் கைகோர்த்து போராடுவது மிக மிக அவசியம் என்று தனது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இளைஞர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை மெரீனாவில் அன்னாவிற்கு ஆதரவு தரும் பொருட்டு உண்ணாவிரதம் கடைபிடிக்க படுகிறது. நீங்கள் உண்ணாவிரதம் இருக்காவிட்டாலும் பரவாயில்லை. ஒருமுறையாவது போய் உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்.

கதறும் வரை கதறிவிட்டேன். அப்பறம் என்ன படிச்சிட்டு இவனுக்கு வேற வேலை இல்லைன்னு சொல்லிட்டு போங்க...அதைதானே காலம் காலமா பண்ணிட்டு இருக்கோம். கொஞ்சம் Times Now சேனலை பாருங்க சார். டெல்லியில் திரண்டிருக்கும் இளைஞர் கூட்டத்தை பார்த்த பிறகாவது நமக்கு உரைக்கட்டும்